ருசிகர பதிவர்கள்

வருந்துகிறேன்: கேபிள் சங்கரின் தந்தை சனிக்கிழமையன்று (14 நவம்பர் 2009) இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். ஒரு பதிவில் லக்கிலுக் “தந்தையை இழப்பது தாங்க இயலாத வலி” எனும் அர்த்தத்தில் ஒரு பின்னூட்டம் இட்டிருந்தார். உணர்ந்தவர்களாலேயே இதைச் சொல்ல முடியும் என்று நினைக்கிறேன். சங்கரும் அவரது குடும்பத்தாரும் அந்த வலியில் இருந்து விரைவில் மீண்டு வர இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

*******************************************************************

ஒரு சில சமயங்களில் நாம் எழுதும் இடுகையும் அது சார்ந்த வேறொரு நிகழ்வும் தற்செயலாகவே அமைந்துவிடுகிறது. அப்படி அமைந்தது தான் இந்த இடுகையின் தலைப்பும், ஆதிமூல கிருஷ்ணன் எனக்குக் கொடுத்த “ருசிகர பதிவர் விருது”ம். விருதுக்கு நன்றி ஆதி (இதே விருதை நான் இவருக்கு திருப்பிக்கொடுக்கப் போறேன். மாத்தி மாத்தி முதுகு சொறிஞ்சிக்கிறோம்ன்னு சந்தேகப்படாதிங்க மக்காஸ்...)

கடந்த வாரத்தில் ஒரு நாள் நான் வாசிக்கும் பதிவுகளில் ஒரு சில ருசிகர பதிவுகளைப் பற்றி ஒரு பதிவிடலாம் என்று எண்ணி இருந்தேன் (வழக்கம் போல சோம்பேறித்தனத்தால் இந்த வாரம் ரிலீஸ்). அப்படி குறிப்பிடும் பதிவர்களின் வரிசை நீளக்கூடும் என்பதால் எண்ணிக்கையைச் சுறுக்கிட எனக்கு நானே சில நிபந்தனைகளைப் போட்டுக்கொண்டேன்.

1. குறிப்பிடும் பதிவர் எனக்குத் தெரியாதவராகவோ, நேரில் சந்திக்காதவராகவோ இருக்க வேண்டும்.
2. பதிவரின் எழுத்துகள் தவிர்த்து அவரைக் குறித்த அதிக விபரங்கள் தெரிந்திருக்கக்கூடாது. பதிவரின் ரசிகனாக இருப்பதை விட பதிவின் ரசிகனாக இருப்பது சுகம்.
3. அவரின் பதிவுகளில் பெரும்பாலானவை எனக்குப் பிடித்திருக்க வேண்டும் அல்லது மனதிற்கு நெருக்கமானவையாக இருக்க வேண்டும்.
4. ஐந்து பதிவர்களோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.

புலம்பல்கள் - ஆதிமூல கிருஷ்ணன்

ஆதியின் பதிவுக்கு முதன்முதல் சென்றபோது படித்தது அவரது தங்கமணி பதிவுகள். படித்த முதல் இடுகையிலேயே “அடடா இவரு நம்மாளுய்யா” என்ற எண்ணத்தை உருவாக்கியவர். புறத்திட்டு மானகையும் (Project Management - நன்றி இராம.கி ஐயா) தரக்கட்டுப்பாடும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பதாலோ என்னவோ இவரது துறைச் சார்ந்த இடுகைகளுக்கும் நான் ரசிகன்.

மழை - அமித்து அம்மா

இவரது அமித்து அப்டேட்ஸ் தான் முதலில் படிக்கத் தொடங்கிய இடுகைகள். போகப் போக இவரது எழுத்தின் வீச்சு அதிகரிக்க இவரது எழுத்துகளின் ரசிகன் ஆகிவிட்டேன். சமீபத்திய “மழை” குறித்த இவரது இடுகை - டாப் க்ளாஸ்.

அவிய்ங்க - ராசா

வெள்ளந்தியான எழுத்துக்குச் சொந்தக்காரர். சொல்லவரும் கருத்தைப் பிறர் மனம் புண்படாமலும் அதே சமயம் ஆணித்தரமாகவும் சொல்வதில் வல்லவர். சில மாதங்களாக மட்டுமே தொடர்ந்து படித்தாலும் இத்தனை நாள் இவரது பதிவுகள் படிக்காமல் போய்விட்டோமே என்று நினைக்க வைப்பவர்.

கசியும் மௌனம் - ஈரோடு கதிர்

என்றாவது ஒரு பதிவு எழுதி அதிலும் எதாவது ஒன்றே ஒன்று உருப்படியான பதிவாக எழுதிக்கொண்டு இருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு ஈரோடு கதிரின் இடுகைகள் ஆச்சர்யத்தையே கொடுக்கும். ஒவ்வொரு இடுகையுமே எதாவது ஒரு நோக்கத்தை/செயல்பாட்டை/உயர்ந்த சிந்தனையை முன் நிறுத்தியே எழுதப்பட்டிருக்கும்.

இதயம் பேத்துகிறது - ஜவஹர்

பதிவின் தலைப்பு என்னவோ பேத்துகிறது என்று சொன்னாலும் பதிவில் பேத்தல்கள் இல்லை. ரசனையான எழுத்துக்குச் சொந்தக்காரர். நறுக்குத் தெறித்தது போல எழுதும் வித்தை இவரது பலம். அறிவியல், அனுபவம், நகைச்சுவை எதையும் விட்டுவைக்காத அசகாய சூரர்.

இவர்கள் அனைவருமே வேறு பல பதிவர்களிடம் இருந்து ருசிகர பதிவர் விருதை வாங்கி இருக்கக்கூடும். இருந்தாலும் பரவாயில்லை, நானும் ஒரு விருதை அவர்களுக்கு அளிக்கிறேன் (ஆமா பெரிய் ஆஸ்கர் அவார்டு கொடுக்குறாரு, நீ யாருடே விருது கொடுக்க??)

வேற்றுமைஉருபு அரைவேக்காட்டுப்பதிவர்கள் இன்னபிற

முன்பு மென்தொடர்க் குற்றியலுகரத்திற்கு ஒற்று மிகாது என்று பதிவு எழுதியபோது பின்னூட்டத்தில் “ஊர்சுற்றி” இரண்டாம் வேற்றுமை உருபு இருக்கும் இடத்தில் ஒற்று வருமென்று சொன்னார். இந்த வேற்றுமை உருபு என்ற வார்த்தையைக் கோனார் உரையில் மனப்பாடம் செய்யும்போது பார்த்த நினைவு. அதுவும் கோனாரின் உரையில் இருந்து ஒரு வார்த்தை மாற்றி எழுதினாலும் சுழித்துவிடும் என் அன்பு தமிழா சிறியருக்காகப் படித்ததோடு சரி. பின்னர் திரும்பிப் பார்த்தது இல்லை. பள்ளிகளில் நல்ல தமிழாசிரியர்கள் வாய்த்தவர்கள் பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்தவர்கள். நான் அவ்வளவு புண்ணியம் செய்திருக்கவில்லை. ஆனால், இணையத்தில் நல்ல தமிழாசிரியர்கள் கிடைத்தார்கள். வல்/மெல்/இடையின குழப்பத்தில் இருந்தவனை ஓரளவு மீட்டெடுத்தவர்கள் அவர்களே.

சரி விஷயத்திற்கு வருவோம். இரண்டாம் வேற்றுமை உருபு வரும் இடத்தில் ஒற்று மிகும் என்பதைத் தெரிந்துகொள்ள முதலில் இரண்டாம் வேற்றுமை உருபு என்னன்னு தெரியணும். அதைத் தெரிந்துகொள்ள வேற்றுமை உருபுன்னா என்னன்னு தெரியணும். கூகிளாண்டவர் கைகொடுத்தார். வேற்றுமை உருபு என்பது ”பெயர்ச்சொல்லோடு சில எழுத்துகள் ஒட்டுக்குச் சேர்வது”. இதில் மொத்தம் எட்டு வேற்றுமை உருபுகளைச் சொல்கிறார்கள். எல்லா வேற்றுமை உருபுகளையும் பார்க்காமல் ஒற்று மிகக்கூடிய உருபுகளை மட்டும் ஒரு ரவுண்டு விடலாம் என்ற எண்ணம். இது தவிர ஒற்று மிகக்கூடிய வேற்றுமை தொகை, உருபும் பயனும் உடன் தொக்கக் தொகையும் பின்னர் பின்னர் பின்னர்.

வேற்றுமை உருபுகளில் பொதுவாக இரண்டாம், நான்காம், ஏழாம் வேற்றுமை உருபுகளுக்கு பின்னர் வல்லின எழுத்தில் தொடங்கும் வார்த்தை வந்தால் அங்கே இரண்டு வார்த்தைகளுக்கும் நடுவில் ஒற்று வரும். சரி, இந்த மூன்று வேற்றுமை உருபுகளையும் பார்க்கலாம்.

இரண்டாம் வேற்றுமை உருபு

ஒரு பெயர்ச்சொல்லோடு “ஐ” என்ற உருபு சேர்ந்து வந்தால் அது இரண்டாம் வேற்றுமை உருபு. உதாரணத்திற்கு “நிலா” பெயர்ச்சொல். இதிலே “ஐ” சேர்த்தால் “நிலாவை”. இது இ.வே.உ. இந்த இ.வே.உக்கு பின்னர் வல்லின எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தை வந்தால் ஒற்று மிகும்.

நிலாவை + பார்த்து = நிலாவைப் பார்த்து
நாட்டை + கைப்பற்று = நாட்டைக் கைப்பற்று

நான்காம் வேற்றுமை உருபு

ஒரு பெயர்ச்சொல்லோடு ”கு” என்ற உருபு சேர்ந்தால் அது நான்காம் வேற்றுமை உருபு.

நிலா - பெயர்ச்சொல்
நிலாவுக்கு - நான்காம் வேற்றுமை உருபு

நிலாவுக்கு + சோறூட்டினாள் = நிலாவுக்குச் சோறூட்டினாள்

ஏழாம் வேற்றுமை உருபு

ஒரு பெயர்ச்சொல்லோடு “இடை” என்ற உருபு சேர்ந்தால் அது ஏழாம் வேற்றுமை உருபு.

நினைவு - பெயர்ச்சொல்
நினைவிடை - ஏழாம் வேற்றுமை உருபு

நினைவிடை + புகுந்து = நினைவிடைப் புகுந்து

இந்த மூன்று வேற்றுமை உருபுகளுக்கும் ஒற்று மிகும். முதல் இரண்டு உதாரணங்களில் “நிலா” வரக் காரணம், என் மகள் பெயர் “நிலா”

நண்பர் நர்சிம் பிடித்த/பிடிக்காத பத்து விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளும்போது பிடிக்காத பதிவர்கள் என்பதில் “அரைவேக்காட்டுப் பதிவர்கள்” என்று குறிப்பிட்டதும் பல பதிவர்கள் வீறுகொண்டு எழுந்து “எப்படி இந்த மாதிரி சொல்லலாம்” என்று கும்மிவிட்டார்கள். முன்பு லக்கிலுக் யுவகிருஷ்ணா ஒரு பதிவில் இப்படி ஏதோ சொல்லும்போதும் ஒரு சிலர் பொங்கி எழுந்த ஞாபகம். தமிழில் வலைப்பதிவுகள் ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் எழுத்தாளர் சுஜாதா பதிவுகள்/குழுமங்கள் குறித்து இப்படியான கருத்தைச் சொன்னபோதும் பொங்கினார்கள். இப்படியெல்லாம் பொங்கி நமது அரைவேக்காட்டுத்தனத்தை வெட்டவெளிச்சம் ஆக்க வேண்டாம் என்பது என் எண்ணம்.

தமிழில் ஓரளவுக்கு பிழைகளைத் தவிர்த்து எழுதக் கற்றுக்கொண்டு இருக்கும்போதே பல பதிவுகளில் எழுத்துப்பிழைகளைப் பார்க்க நேரிடும்போது “இங்கே பிழை, இங்கே பிழை” என்று மனம் சொல்கிறது. சில நேரங்களில் பதிவை ரசிப்பதை விட இதிலேயே மனம் சென்றுவிடுகிறது. கொஞ்சமே தெரிந்த எனக்கே இந்த நிலைமை என்றால் தமிழைப் பிழையே இல்லாமல் எழுதத் தெரிந்தவர்கள் நிலை எப்படி இருக்கும் என்று யோசித்தேன். அவர்கள் நிறைகுடம், தளும்ப மாட்டார்கள். நான் குறைகுடம், கூத்தாடத் தான் செய்வேன்.

கொட்டுச்சத்தம்

கொட்டுச்சத்தம்



"தப்புக்கொட்டு மணி வீடு இது தானே?"

வீட்டுக்கு வெளியே ஏதோ ஒரு குரல் தன் மகனின் பெயர் சொல்லி அழைப்பதைக் கேட்டு பூவாயி காண்டாவிளக்கை கையில் எடுத்துக்கொண்டு விளக்கின் சொற்ப வெளிச்சத்தில் தடுமாறி கதவைத் திறந்துகொண்டு வெளியில் வந்தாள்.

"யாரு சாமி இந்த ராத்திரி நேரத்துல?"

"மணி வீடு தானே இது?" வந்தவர் மீண்டும் கேட்டார்.

"ஆமா"

"மணி வீட்டுல இல்லியா?"

"பொழுது இருட்டுனா சாக்கனாங்கட பக்கமா ஒதுங்கிருப்பான். கழுதக் கெட்டா குட்டிச்செவுரு. வேற எங்க போயி தொலையப்போவுது. இன்னா சாமி விசியம்?"

"நாட்டாம வீட்டுல சாவு உழுந்துடுச்சு. தப்படிக்க மணிய கூட்டி வரச் சொன்னாங்க"

"ஐயோ பெரியவரு வூட்டுலியா, யாரு சாமி?" அதிர்ச்சி அவளது குரலின் விளிம்பிலேயே தெரிந்தது.

"ஐயாவோட அம்மா தான். ரெண்டு மாசமா இன்னைக்கோ நாளைக்கோன்னு இழுத்துகிட்டு கெடந்துச்சு. வடக்க இருந்த பொண்ணும் பேரப்புள்ளைங்களும் வந்து இன்னைக்கு பாலு ஊத்த, அப்டியே அடங்கி போச்சு"

"நல்ல சாவு தான். நீங்க போங்க சாமி, நா மணிய வரச் சொல்லுறேன்"

"அவன் ஒருத்தன் மட்டுமா தப்பு எடுத்துகிட்டு வந்துடப் போறான். கூட ரெண்டு மூணு பயலுவள கூட்டி வரச் சொல்லு. நாட்டாம வீட்டு சாவு, ஊரு மொத்தத்துக்கும் கொட்டுச் சத்தம் கேக்கணும்".

"சொல்லிடுறேன் சாமி"

"சீக்கிரமா வரச் சொல்லு. இப்போவே கொட்டு ஆரம்பிச்சிடணும். அவன் பாட்டுக்கு காலையிலே பொழுது விடிஞ்சி வந்து நிக்கப் போறான்" நாட்டாமை வீட்டு சாவுக்கு தாரை தப்பட்டைக்கு சொல்ல வந்தவர் ஒளியை உமிழத் தயங்கும் டார்ச் வெளிச்சத்தில் இருட்டை விலக்கி நடந்து சென்றார்.

பூவாயிக்கு வீட்டை விட்டு இந்த நேரத்தில் தனியே சென்று சாக்கனாங்கடையில் இருக்கும் மகனை அழைக்கத் தயக்கம். காரணம், இன்றோ நாளையோ என்று வயிற்றைப் பிடித்துக்கொண்டு இருக்கும் நிறைமாத கர்ப்பிணியான அவளது மருமகள் பேச்சிமுத்து. திருமணத்தின் போதே அப்பா இல்லை. திருமணம் முடிந்து சில மாதங்களில் அம்மாவும் இறந்துபோய்விட, பேச்சிமுத்துவிற்கு புகுந்த வீடே அவளது தாய்வீடும் ஆனது. பூவாயியும் தன் மருமகளை தன் மகளாகவே கவனித்துக்கொண்டாள். வயிற்றைப் பார்க்கும்போது அதிகம் தாங்காது என்று தோன்றியதால் தனியே விட்டுச் செல்ல அவளுக்கு பயமாக இருந்தது.

"ஏண்டீ, ஒம்புருசனுக்கு நாளு கெழம தெரியாதா? இன்னைக்குமா அந்த எழவெடுத்த சாக்கனாங்கட பக்கம் போவணும்"

"ஆமா, தொர என்னைக்கு போவாம இருந்திருக்காரு. இன்னைக்கு மட்டும் விசேசம். நா இருக்கேன் யத்தே, நீ போயி மாமன கூட்டி வா"

மருமகள் தனியே இருப்பதாக தைரியம் சொன்னாலும் பூவாயிக்கு மனசு கேட்கவில்லை. ஆனாலும் நாட்டாமை வீட்டுச் சாவுக்கு மணி போக வேண்டும். சரி நடப்பது நடக்கட்டும் என்று "பேச்சியம்மா, நீதாம்மா தொண இருக்கணும்" என்று மனதிற்குள் கடவுளை வேண்டிக்கொண்டு இருட்டிலேயே மகனைத் தேடிப் புறப்பட்டாள்.

பூவாயி பாதி வழி நடந்துகொண்டு இருக்கும்போதே "எம்பொண்டாட்டி புள்ளத்தாச்சிங்க, ரெண்டு பொட்டுக்கல்ல அள்ளிப் போடுங்க" என்று கிண்டலாக பாடியபடி மணி வருவது தெரிந்தது. கொஞ்சம் நெருங்கும்போது ஆடியபடி வருவதும்.

"எழவெடுத்தவனே, பொண்டாட்டி புள்ளத்தாச்சிங்கறது சுதி உள்ள ஏறுன பொறவு தான் தெரியுதாக்கும். நெறமாசக்காரி ஊட்டுல இருக்குறப்போ இப்புடி கொஞ்சக்கூட பொறுப்பில்லாம குடிச்சிட்டு வர்றியே"

"தன் வயிற பட்டினி போட்டு என்னுயிர வளத்தவளேஏஏஏஏஏஏஏஏஏஏஏ" தாயைப் பார்த்து மணி பாடத் துவங்கினான். மணிக்கு நல்ல கணீர் குரல். பாடிக்கொண்டே தப்பட்டை அடிப்பதில் கில்லாடி. அதுவும் கொஞ்சம் சாராயம் உள்ளே போய்விட்டால் பாட்டுக்கு கேட்கவே வேண்டாம். மணியின் பாட்டுக்காகவே தப்படிக்க வெளியூர்களில் இருந்துகூட சில சமயங்களில் சாவு வீட்டிற்கு கூட்டிப் போவது உண்டு.

"என்னப்பெத்த ஆத்தா, ஒம்புள்ள சந்தோஷத்துல குடிச்சிருக்கேன். இந்த மணிக்கு ஒரு மணிக்குட்டி பொறக்கப் போறான், அதுக்காக குடிச்சிருக்கேன். புள்ளப் பொறந்த ஒடனே பாரு, குடிக்கிறத நிறுத்திடுறேன்." தன் அன்பான மனைவிக்கு குழந்தை பிறக்கப் போகிறது என்ற சந்தோஷம் அவன் குரலில்.

"நாளை முதல் குடிக்க மாட்டேன், சத்தியமடி தங்கம். இன்னிக்கு ராத்திரி தூங்க வேணும், ஊத்திக்கிறேன் கொஞ்சம்" அடுத்தடுத்து பாடல்களாகவே பதில் வர ஆரம்பித்தது மணியிடம் இருந்து.

"தூங்கப் போறானாம் தூக்கம், இன்னிக்கு ஒந்தூக்கம் நாட்டாம வூட்டுல தான்"

"இன்னா விசியம், நாட்டாம வூட்டுல யார்னா புட்டுக்கிட்டாங்களா? இல்ல நாட்டாமயே புட்டுக்கிட்டாரா?" கேள்வியில் கிண்டல் தொனித்தது.

"நல்ல வார்த்த வாயில வராதா ஒனக்கு, நாட்டாமயோட அம்மா தவறிட்டாங்களாம். தப்பு கொட்ட ஒன்ன வரச் சொல்லி ஆளு வந்திச்சி".

"த, சும்மா பொலம்பாத. ஊருல எவனாவது புட்டுகிட்டா நா ஒக்காந்து அழணுமா? அப்பிடி அழணும்ன்னா தெனமும் அழணும். ஆமா, எங்க தெனமும் சாவு உழுது. தெனமும் எவன் வூட்டிலியாவது சாவு உழுந்தா கொஞ்சம் காசாவது கையிலே நிக்கும்."

"வாயக்கழுவுடா வந்தேறிக்கு பொறந்தவனே. அப்பனுக்கு தப்பாம பொறந்து வந்துருக்கு, எப்போ பாரு காசு காசுன்னு" பூவாயிக்கு கண்களில் கண்ணீர் தன்னை அறியாமல் வந்தது. மணியின் தந்தையும் "காசு காசு" என்று ஓடியவர் தான். எங்கே இறப்பு நடந்தாலும் தப்படிக்க போய்விடுவார். ஆனால், அவர் காசுக்கு அலைந்தது தனக்காக இல்லை, தன் மகனுக்காக. தன்னை போல அவனும் தப்பட்டை அடிக்காமல் பள்ளியில் படித்து நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால், மணிக்கு தான் படிப்பு சுட்டுப் போட்டாலும் வரவில்லை. ஆறாம் ஏழாம் வகுப்புகளிலேயே இரண்டு முறையும் மூன்று முறையுமாக தவறி, தன் தகப்பன் இறந்த மறுநாளே அவரது தப்பட்டையை கையில் எடுத்துக்கொண்டான். மணிக்கு படிப்பு தான் வரவில்லையே தவிர தப்படிக்க நன்றாகவே வந்தது. "டகர டகர டகர டம்டம்டம்" என்று அவன் அடிக்கத் தொடங்கினால் இறப்பின் துயரம் மறந்து கூட்டம் அவனது தப்படியை கவனிக்கத் துவங்கிவிடும்.

"நீ மட்டுமா போவாத, ரெண்டு மூணு பேரா வரச் சொன்னாங்க. கணேசனையும் பாண்டியையும் கூட்டிட்டுப் போ"

"த, எந்த வூட்டுக்கு எத்தன பேரு கூட்டிக்கிட்டு போணா எவ்ளோ கறக்கலாம்ன்னு எனக்கு தெரியும். நீ போயி ஒம்மருமவள கவனி" என்று கூறிக்கொண்டிருக்கும்போதே வீடு வந்துவிட்டது.

"ஏபுள்ள பேச்சி, இந்தா மொளகா பச்சி. ரெண்டு எடுத்து திண்ணு, எம்புள்ள நல்ல காரசாரமா பொறப்பான்" என்று சாக்கனாங்கடை வாசலில் இருக்கும் செவிட்டுக் கிழவியிடம் வாங்கிய மிளகாய் பஜ்ஜியை மனைவிக்குக் கொடுத்தான் மணி.

"புள்ள நா நாட்டாமைய்யா வூட்டுக்கு தப்படிக்கப் போறேன். நீ பத்ரமா இரு" என்று மனைவிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினான். பேச்சிமுத்து கணவன் ஆசையுடன் வாங்கி வந்திருந்த மிளகாய் பஜ்ஜியை சாப்பிட ஆரம்பித்து இருந்தாள்.

"எலேய், நாளைக்கு பொழுது சாயறதுக்குள்ள வந்துடு. வயித்துப்புள்ளக்காரி இங்கே தனியா இருக்கா".

"வர்றேன் வர்றேன்" என்று சொல்லிக்கொண்டு துணியில் முடிந்து கட்டியிருந்த பறையை எடுத்து தோளில் மாட்டிக்கொண்டு பக்கத்து வீட்டில் இருந்த பாண்டி, கணேசனையும் கூட்டிக்கொண்டு நாட்டாண்மை வீட்டை நோக்கி நடந்தான்.

நாட்டாண்மையின் வீடு நெருங்கும்போதே அழுகுரல்கள் கேட்க ஆரம்பித்துவிட்டது. அக்கம்பக்கத்து சொந்தங்கள் வந்துவிட்டிருந்தனர். இறந்து போனது தொண்ணூறுகளை தொட்டவரானாலும் பிறந்த பிள்ளைகளுக்கு என்றும் தாய் தானே, நாட்டாண்மையே கசங்கிய பனியனுடன் கண் கலங்கி தான் இருந்தார்.

"எலேய் மணி, சேதி சொல்லி எவ்ளோ நாழியாச்சு, அன்னநட நடந்து வர்றியா நீ, சீக்கிரம் கொட்டு கொட்ட ஆரம்பி. ஆளுங்கல்லாம் வர ஆரம்பிச்சாச்சு. இன்னும் கொட்டு கொட்டாம இருந்தா என்ன அர்த்தம்" என்று அங்கே இருந்த ஒரு பெரியவர் அதட்ட ஆரம்பித்தார்.

"ஐயா, தோ ஆரம்பிச்சிட்டேன்." என்று கூறிக்கொண்டே சுள்ளிகளை கூட்டிச் சேர்த்து தீ உண்டாக்கி அதில் கொண்டு வந்திருந்த பறையின் தோல் பகுதியை காட்டி அங்கங்கே சிறிதாக தட்டி சுதி சேர்க்க ஆரம்பித்தான்.

"ஐயா, வர்ற வழியிலே ஒண்ணும் உள்ளுக்கு சேக்காம வந்துட்டேன், ஒரு டீ குடிக்கணும். காசு இருந்தா குடுங்க"

"மணி, நீ எந்த டீ குடிக்க காசு கேக்குறன்னு தெரியாதா, கையிலே காசு ஏறாம ஒன்னோட தப்பு குச்சிய தொட மாட்டியே"

"பெரியைய்யா வூட்டு சாவாச்சிங்களே, அடிக்கிற அடிக்கு ஊரு மொத்தமும் ஐயா வூட்டுக்கு வந்துட வேணாமா, அதுக்கு தான்யா" என்று பவ்யமாக கையை நீட்டி காசை வாங்கிக்கொண்டான்.

அடுத்த சிறிது நேரத்திலேயே அந்தக் காசு சாராயமாக மாறிவிட, பறையின் தோலும் தீயில் நன்றாக வாடி இருந்தது.

டகர டகர டகர டம் டகர டம் டகர டம், டம் டம் டம் டகர டம் டம் டம் டகர டம் டம் டம்

மணியின் பறையில் இருந்து வந்த சத்தம் ஊர் முழுக்கக் கேட்கத் துவங்கியது. பக்க வாத்தியங்களாக கணேசனும், பாண்டியும்.

மறுநாள் காலையிலே நாட்டாண்மையின் வீட்டில் கூட்டம் தாக்குப்பிடிக்க முடியாத அளவுக்கு வந்திருந்தது. கூட்டம் வர வர மணியின் கொண்டாட்டமும் அதிகம் ஆகியது. நாட்டாண்மையின் சம்பந்தி முறை உள்ளவர்கள் வாய்க்கரிசி கொண்டு வர, வந்த அனைவருக்கும் அவரவர் ஊர் பெயர் உறவுமுறை சொல்லி தப்படிக்க ஆரம்பித்தான். இடையிடையே தாயின் பெருமை சொல்லும் பாடல்களும் வந்துகொண்டே இருந்தது. இறப்பிற்கு வந்த எம்.எல்.ஏ, அக்கம்பக்கத்து ஊர் பெரியவர்கள் கொடுத்த காசு என்று மணிக்கு இன்று நன்றாகவே காசு சேர்ந்திருந்தது. காசு சேர சேர, தப்பட்டையின் ஓசையும் லயமும் கூடிக்கொண்டே இருந்தது.

மாலையில் அடக்கம் முடிந்து சுடுகாட்டில் இருந்து திரும்பி வந்துகொண்டு இருக்கும்போது தான் நிறைமாத மனைவி நினைவுக்கு வந்தாள். மணிக்கு பறையை கையில் எடுத்துவிட்டால் வீடு, உறவு, பசி எல்லாமே மறந்துபோகும். காசும் சாராயமும் வந்துகொண்டு இருந்தால் போதும், ஓயாமல் கொட்டுச்சத்தம் கேட்கும். மனைவியின் நினைவு வந்ததும் வழியில் இருந்த பூக்கடையில் கொஞ்சம் கதம்பம் வாங்கலாம் என்று சென்றான்.

"மாமோய், இன்னிக்கு தான் நெறையா காசு வந்துருக்குல்ல, அக்கா ஆசைக்கு மல்லிப்பூ தான் வாங்கிட்டு வாயேன்" என்றான் கணேசன்.

"அதுவும் சரி தான்" என்று நினைத்துக்கொண்டு மல்லிகைப்பூ நிறைய வாங்கிக்கொண்டு வீடு நோக்கி "எம்பொண்டாட்டி புள்ளத்தாச்சிங்க, ரெண்டு பொட்டுக்கல்ல அள்ளிப் போடுங்க" என்று பாடிக்கொண்டே நடந்தான்.

வீட்டு வாசலை நெருங்கும்போது "ஐயையோஓஓஓஓஓஓஓஓஓ இப்புடி பச்சப்புள்ளய தவிக்கவுட்டு போயிட்டியே ஆத்தா" என்று பூவாயியின் அலறல் கேட்டது.

தாயின் அலறல் கேட்டு வீட்டினுள் ஓடிப் பார்க்க அங்கே அவனது மனைவி பேச்சிமுத்து மரக்கட்டையாக கிடந்தாள். அருகிலேயே துணியில் சுற்றிய குழந்தை அழுகையுடன். குழந்தை வெளியில் வருவதில் சிக்கல் ஏற்பட்டு பேச்சிமுத்து இறந்துவிட்டிருந்தாள்.

"ஏ பேச்சியம்மா, நல்லபடியா பேரப்புள்ளய கையில குடுன்னு கேட்டதால பேரப்புள்ளய மட்டும் கையில குடுத்துட்டு எம்மவள கொண்டு போயிட்டியா" என்று பூவாயி அலறிக்கொண்டு இருந்தாள்.

மணி கையில் இருந்த மல்லிகைப்பந்தை மனைவியின் மேல் போட்டுவிட்டு குழந்தையைப் பார்த்தான். பிறந்தது அவன் ஆசைப்பட்ட மணிக்குட்டி தான்.

வெளியில் வந்த மணி, துணி முடிச்சில் இருந்த பறையை வெளியில் எடுத்து அடிக்க ஆரம்பித்தான்.

"எம்பொண்டாட்டி புள்ளத்தாச்சிங்க, ரெண்டு பொட்டுக்கல்ல அள்ளிப்போடுங்க"

டகர டகர டகர டம் டகர டம் டகர டம், டம் டம் டம் டகர டம் டம் டம் டகர டம் டம் டம்

மணியின் கொட்டுச்சத்தம் அவனது மணிக்குட்டியின் அழுகையோடும், தாயின் அலறலோடும் அந்தச் சேரியையும் தாண்டி கேட்கத் தொடங்கியது.

பி.கு: 2006ல் தேன்கூடு சிறுகதைப் போட்டிக்காக எழுதிய சிறுகதை. பரிசெல்லாம் கெடைக்கல ஹிஹி

தீபாவளி சிறப்புப் பதிவு 2009 - தொடர்பதிவு

இந்தத் தொடருக்கு அழைத்த நானானிக்கு நன்றி. அழைப்பதோடு நிறுத்தி இருந்தால் பரவாயில்லை, வலையுலகச் சக்கரவர்த்திகள் அல்லவா என்று வேறு சொல்லி இருக்கிறார். எதுவும் உள்குத்து இல்லையென நம்புவோமாக :-).

சரி இனி தொடருக்குப் போவோம்....

1) உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு ?

இருப்பதிலேயே சிரமமான கேள்வி நம்மைப் பற்றி நாமே சொல்ல வேண்டியது தான். இருந்தாலும் சொல்ல முயற்சிக்கிறேன். கொஞ்சம் புத்திசாலித்தனம், நிறைய குறும்புத்தனம், அப்பப்போ பொறுக்கித்தனம், எப்போவாவது மிருகத்தனம், சில நேரங்களில் எட்டிப் பார்க்கும் மனுஷத்தனம் இப்படி ஒரு கலவையான மனுஷன். (ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் யப்பா இதுக்கே கண்ணக் கட்டுதே!!!)

2) தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம் ?

சிறுவயது முதலே தீபாவளி வெகுவிருப்பத்தோடு கொண்டாடியதில்லை. அதனால் மறக்க முடியாத சம்பவம் என்று எதுவும் இல்லை.

3) 2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் ?

நான் வசிக்கும் ரியாத்தில் தான் இருந்தேன்.

4) த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?

தீபாவளி என்றில்லை, எந்தப் பண்டிகையுமே கூட்டமாகக் கொண்டாடவேண்டும் என்று ஆசைப்படுபவன் நான். அந்த வகையில் தீபாவளிக்கு பின்னர் வந்த வியாழனன்று (சனிக்கிழமை எல்லோருக்கும் வேலைநாள் என்பதால்) தீபாவளியை குழந்தைகள் பெரியவர்கள் என ஐம்பதிற்கும் மேற்பட்டவர்கள் எல்லோரும் ஆட்டம்பாட்டம் கொண்டாட்டமாகக் கொண்டாடினோம்.

5) புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?

தீபாவளிக்கு நான் புத்தாடை அணிவதில்லை. கோமதிக்கு சென்னையில் இருந்து வாங்கி வந்த புடைவை, நிலாக்குட்டிக்கு துபாய் சென்றபோது வாங்கிய தேவதை உடை (தேவதைக்கு தேவதை உடை தானே போடணும்)

6) உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் ? அல்ல‌து வாங்கினீர்க‌ள் ?

முறுக்கு, குலாப் ஜாமுன், உடைத்தக்கடலை (பொட்டுக்கடலை) உருண்டை, வடை

7) உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?

சனிக்கிழமை வேலைநாள். காலையில் வேலைக்கு கிளம்பும் அவசரத்தில் அலுவலகம் சென்ற பின் அனைவருக்கும் தொலைபேசியில் வாழ்த்த நினைத்து அலுவலகத்தில் மூச்சு முட்டும் அளவுக்கு வேலை. யாருக்கும் தொலைபேசவும் இல்லை, யாருடைய அழைப்பையும் எடுக்கவில்லை. மாலை ஐந்து மணிக்கு மேலாக உறவுகளுக்கு தொலைபேசி அழைப்பாகவும், நண்பர்களுக்கு குறுஞ்செய்தி மூலமும் வாழ்த்து அனுப்பினேன்.

8) தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா ? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா ?

ஊரில் இருந்தபோது கல்லூரி காலம் வரையில் தீபாவளிக்கு வெளியாகும் திரைப்படங்கள் பார்க்கப்போவது உண்டு. ரியாத்தைப் பொறுத்தவரை விடுமுறை நாளாக இருந்தால் கொஞ்சம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பதுண்டு. இந்த முறை வெற்றிகரமாக ஒரு தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி கூட பார்க்கவில்லை.


9) இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ? தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் எனில், அவ‌ற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வ‌லைத்த‌ள‌ம் ?

உதவி செய்வதைப் பொதுவாக நாள் கிழமையெல்லாம் பார்த்துச் செய்வது இல்லை. குறிப்பிட்ட தொண்டு நிறுவனத்திற்கென்று வரைமுறையும் வைத்துக்கொள்வது இல்லை.

10) நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் நால்வ‌ர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் ?

இது ஒரு சிரமமான கேள்வி தான். இருந்தாலும் முயற்சிக்கிறேன்

நான் அழைக்க விரும்பும் நபர்கள்

நர்சிம் - http://www.narsim.in/
பரிசல்காரன் - http://www.parisalkaaran.com/
அவிங்க ராசா - http://aveenga.blogspot.com/
அமித்து அம்மா - http://amirdhavarshini.blogspot.com/

ஃபார்ம்வில்லேயால் நிகழும் நன்மைகள்

மாப்பி ரங்கனுக்கு (இவரு நம்ம சிபி அண்ணாச்சிக்கு மட்டும் மாப்பி இல்ல, ஊருக்கே மாப்பி) ஃபார்ம்வில்லே மேல என்ன காண்டோ, இல்ல உஷார் பண்ண ஃபிகரு தன்னோட கடலைப் போடாம விவசாயம் பார்த்துக்கிட்டு இருந்த கடுப்போ, மகா டென்ஷன்ல ஒரு மொக்கை மடலைப் போட்டுட்டாரு. அவரு மடல் போட்ட நல்ல நேரம் நாளுக்கொரு கதிரு நேரத்துக்கு ஒரு காசுன்னு குண்டுசட்டியிலே குதிரை ஓட்டிக்கிட்டு இருந்த என்னை மாதிரி ஆளுங்களுக்கு நெறைய பக்கத்துத் தோட்டத்து பண்ணையாருங்க கிடைச்சாங்க. நல்ல மகசூலும் ஆகுது. மாப்பி என்ன தான் காண்டா எழுதினாலும் ஃபார்ம்வில்லேல விவசாயம் பண்றதால நிறைய நன்மைகள் இருக்குதுங்க.

1. மத்தவங்களுக்கு உதவி செய்யிற மனப்பான்மை அதிகம் ஆகுது. வீட்டுல பொண்டாட்டிக்கு ஒரு கப் காஃபி போட்டுக்கொடுக்கணும்ன்னா கூட யோசிக்கிற என்னை மாதிரி ஆளுங்க ஓடி ஓடி பக்கத்துப் பண்ணையிலே காக்கா, நரி விரட்டிவிட்டு களை பிடுங்கி உதவி செய்யிறோம்ன்னா அதுக்கு காரணம் ஃபார்ம்வில்லே தானுங்க.

2. அக்கம்பக்கத்துல இருக்கிறவங்கள நல்ல நாளிலேயே திரும்பிப் பார்த்து ஒரு சிரிப்பு சிரிக்க மாட்டோம். ஆனா, இப்போ ஃபார்ம்வில்லேல தெனமும் பக்கத்து பண்ணையாருங்களுக்கு ஏதோ நம்ம சக்திக்கு முடிஞ்ச பன்னியோ, பசுவோ பரிசாக் கொடுக்குறோம். அவங்களும் அவங்க சக்திக்கு முடிஞ்ச மாதிரி ஒரு குதிரையோ, ஆட்டையோ கொடுக்குறாங்க. இப்படி ஒருத்தருக்கு ஒருத்தர் பரிசு கொடுத்துக்கிற நல்லப்பழக்கத்தையும் இந்த ஃபார்ம்வில்லே கத்துத் தருதுங்க.

3. ஊர்ல இருக்கிற நெலத்த வித்துப்புட்டு சிட்டில வந்து புறாக்கூடு மாதிரி ஒரு வீட்டுல வாழுற இந்தக் காலத்துல தெனமும் காலையிலே விதை விதைச்சு அது வளர்ற வரைக்கும் பத்திரமா பாதுகாத்து அறுவடை பண்றதுன்னா சும்மாவா? அதுவும் விதைச்சதெல்லாம் விளைஞ்சு கிடக்குறப்போ காய்ஞ்சு பதரா போய்டக்கூடாதேன்னு பதறிக்கிட்டு வந்து அறுவடை செய்வோம் பாருங்க, பத்து தலைமுறையா விவசாயம் பண்ண எங்க பாட்டன் பூட்டன் கூட அப்படி ஒரு பதட்டத்தோட விவசாயம் பார்த்திருக்க மாட்டாங்க, நாங்க இப்போ அப்படி விவசாயம் பண்றோம். இதுக்கு காரணமும் ஃபார்ம்வில்லே தானுங்க.

4. விதை விதைச்சு அறுவடை பண்றதெல்லாம் கூட ஒண்ணுமே இல்லைங்க. நெலத்தப் பக்குவமாப் பாத்திக்கட்டி அலங்காரமெல்லாம் செஞ்சு ஒவ்வொரு பாத்திக்கு ஒவ்வொரு விதைய விதைச்சு, அக்கம் பக்கமெல்லாம் ஆடு மாடு குதிரைன்னு கட்டி வச்சு ஆப்பிளு ஆரஞ்சுன்னு மரத்தையெல்லாம் நட்டுவச்சு வயலுக்கு நடுவிலே ஒரு வீட்டையும் கட்டி அங்கே குடியிருக்கிற பாக்கியமெல்லாம் யாருக்குங்க கிடைக்கும்? அந்த பாக்கியமெல்லாம் ஃபார்ம்வில்லே நமக்குக் கொடுக்குதுங்க.

அதனால இதுவரைக்கும் ஃபார்ம்வில்லேல சேராம இருந்தவங்க எல்லாம் உடனே அங்கே சேர்ந்து என்னையும் உங்க பக்கத்து பண்ணையாரா சேர்த்துக்கோங்க.

விவசாயி ஆகணும்ன்னா இங்கே போங்க - http://apps.facebook.com/onthefarm/index.php

என்னை பக்கத்து தோட்டக்காரனா அழைக்கணும்ன்னா என்னோட மின்னஞ்சல் kvraja [at] gmail [dot] comக்கு ஒரு பத்திரிகை வச்சிடுங்க.

கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயீயீயீ விவசாயீயீயீயீயீ

பளார்

பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிந்து விடுமுறையில் ஒரு நாள். சைக்கிளில் சென்றுகொண்டு இருக்கும்போது என் நண்பன் என்னை அழைத்தான். ஏன் என்று கேட்டு சைக்கிளை நிறுத்தினேன். “சும்மா தான் கூப்பிட்டேன் போடா” என்றான். அங்கே அவன் வீட்டு வாசலில் அவன் அம்மாவோடு பேசிக்கொண்டிருந்த பெண்கள் இதைப் பார்த்துச் சிரித்துவிட்டார்கள். என் அம்மா என்னை கடைக்குச் சென்றுவரச் சொன்னதால் சைக்கிளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டேன். ஆனாலும், அந்தப் பெண்கள் சிரித்ததும் அதற்கு காரணமாக என் நண்பனின் செயலும் என்னுள் வன்மத்தைத் தூண்டிவிட ஆரம்பித்தன. திரும்பி வந்து அவன் வீட்டு வாசலில் சைக்கிளை நிறுத்திவிட்டு அவனை அழைத்தேன். வந்தான். “பளார்” கன்னத்தில் ஓர் அறை. நான் அடிப்பதைப் பார்த்த அவனது அம்மா என்னைத் திட்டிக்கொண்டே பள்ளியில் (அங்கிருந்து 1.5 கிமீ தூரம்) வேலைப் பார்த்துக்கொண்டு இருந்த என் அப்பாவிடம் சென்று முறையிட்டு இருக்கிறார். மதிய உணவு இடைவேளைக்கு வந்த என் அப்பா என்னை அடிக்கவில்லை, திட்டவில்லை. ஆனால், ஐந்து நாள்கள் என்னோடு பேசவே இல்லை. அப்படி ஒரு தண்டனையை என் அப்பாவிடம் இருந்து நான் என் பதினேழாவது வயதிற்கு முன்பும் சரி பின்பும் சரி, பெற்றதே இல்லை. அதன் பிறகு, இந்தப் பதினைந்து வருடங்களில் நான் யாரையுமே கைநீட்டி அடித்ததே இல்லை.

ரோசாவஸந்த் சார், நீங்களும் இப்படி பதினேழு வயதில் அடித்திருக்கலாம். அது வயதின் கோளாறாகவோ, உணர்ச்சிவசப்பட்ட நிலை என்றோ நாங்களும் கருதி இருப்போம். ஆனால், இந்த வயதில் தனக்கு எதிராக பதிவில் சில கருத்துகளை வைத்தார் என்ற ஒரே காரணத்திற்காக அவரை நட்பு ரீதியில் அழைத்து நன்றாக ஊற்றியும் கொடுத்து இருட்டுச்சந்தில் கொண்டுபோய் மூக்கில் குத்துவது எந்த வகையான வீரமென்று தெரியவில்லை. உங்களின் இந்த வீரத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். இருதரப்பு நியாயங்கள், உணர்ச்சிவசப்பட்ட நிலை, குடித்திருந்ததால் நடந்திருக்கலாம் என்றெல்லாம் வியாக்கியானம் பேசிக்கொண்டு இருக்கும் நண்பர்களே, சுந்தரின் நிலைமையில் நீங்கள் இருந்திருந்தால் உங்களது ரியாக்‌ஷன் எப்படி இருந்திருக்கும் என்பதையும் கொஞ்சம் யோசித்துக்கொள்ளுங்கள்.

பி.கு #1: இது நான் மதிக்கும் ஒரு பதிவரை நான் மதித்த மற்றொரு பதிவர் கைநீட்டி அடித்ததற்கான கண்டனப்பதிவு மட்டுமே. இதற்கு உள்காரணங்களைக் கண்டுபிடித்து அநாவசிய எச்சங்களை இட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

பி.கு #2: நாகரீகமான, தனிமனிதத் தாக்குதல்கள் இல்லாத பின்னூட்டங்கள் எச்சம் வகையில் வராது (வந்த இரண்டு பின்னூட்டங்களுமே இதே வகையான கேள்வியை முன்வைத்ததால் இந்த விளக்கம்)

சிதம்பரத்தில் பிறந்தவருக்கு நோபல் பரிசு


ஊர்பாசம் யாருக்குமே இருக்கும். எனக்கும். இன்று அறிவிக்கப்பட்ட நோபல் பரிசு வரிசையில் வேதியியலுக்கான நோபல் பரிசைப் பகிர்ந்துகொண்ட மூவரில் ஒருவர் சிதம்பரத்தில் பிறந்த அறிஞர் வெங்கி இராமகிருஷ்ணன் எனப்படும் வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன். 1952ம் ஆண்டு பிறந்த அறிஞர் வெங்கி இராமகிருஷ்ணன் 1971ல் பரோடா பல்கலைகழகத்தில் இயற்பியலில் இளங்கலைப் பட்டம் பெற்று பின்னர் ஓஹியோ பல்கலைகழகத்தில் 1976ம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றவர். தற்பொழுது மூத்த ஆராய்ச்சியாளராக கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகத்தில் பணியாற்றி வருகிறார். இவர் ரிபோசோமின் சிக்கலான கட்டமைப்புகளைத் தொகுத்தளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐயாவின் இணையதளம் - http://www.mrc-lmb.cam.ac.uk/ribo/homepage/ramak/index.html

நோபல் பரிசைப் பெற்ற அறிஞர் வெங்கி இராமகிருஷ்ணனை வாழ்த்துவோம்.