கவியரங்கம் - முதல் கவிஞர் அழைப்பு

எழுத்துக்கூட மின்னஞ்சல் கவியரங்கத்தில் கடவுள் வாழ்த்துடன், சபை வணக்கத்துடன் தொடங்கி முதல் கவிஞருக்கான அழைப்பு இது. ஆசிரியப்பா வகை கவிதையை முதன் முறையாக முயற்சித்து இருக்கிறேன். குறைகள் இருந்தால் சுட்டிக் காட்டவும்.

மனிதம்

கடவுள் வாழ்த்து [நிலைமண்டில ஆசிரியப்பா]

நல்லோர் உலகு நாளும் தழைத்து
நல்லிணக் கமது நமக்குள் விளைந்து
புவியினில் மனிதம் பரவிட வேண்டி
கவியினில் வடித்தே காட்ட வந்தோம்
சொல்லும் பொருளும் சீராய் அமைந்திட
எல்லாம் வல்ல இறைநீ அருளவே

சபையோர்க்கு வணக்கம் [நேரிசை ஆசிரியப்பா]


பாங்காய் கவிதை படித்திடக் கூடும்
சான்றோர் பலரும் சபையினில் இருக்க
தளையும் சீரும் தெரிந்ததை வைத்து
தலைமை பொறுப்பை தந்தோர்க்கு தலையைத்
தாழ்த்தி வணக்கம் சொல்வேன்
வாழ்த்திட வேண்டும் வாஞ்சை யுடனே


கவிஞர் பஃக்ருதீனுக்கான அழைப்பு[நிலைமண்டில ஆசிரியப்பா]

நாற்பதைத் தொட்டும் நரைகள் இல்லை
கற்கும் விருப்பில் குறைவும் இல்லை
மரபோ உந்தன் மடியினில் தவழும்
முறையே புதுசும் முன்னால் நிற்கும்
குட்டுகள் என்றும் கொடுத்தது இல்லை
நட்பினில் குறைவை நாட்டிய தில்லை
அன்பால் என்றும் என்னை அணைக்கும்
நண்பா நீயும் நற்பா தருகவே

5 மறுமொழிகள்:

கவிதா | Kavitha said...

சூப்பர்... கலக்குங்க.. தலைவா !! :)

உங்க கவிதையை விமர்சனம் செய்யும் அளவிற்கு நான் இல்லை :) விட்டுடுங்கோ. .அப்படி ஓரமா உட்கார்ந்து கவியரங்கத்தை கவனிக்கிறேன்.. :)))

KVR said...

//உங்க கவிதையை விமர்சனம் செய்யும் அளவிற்கு நான் இல்லை :) விட்டுடுங்கோ. .அப்படி ஓரமா உட்கார்ந்து கவியரங்கத்தை கவனிக்கிறேன்.. :)))//

ஹ்ம்ம் நீங்க வேற, நான் கூப்பிடப் போற ஆளுங்க தான் பெரிய தலைங்க, நம்ம சும்மா பிஸ்கோத்து.

இப்னு ஹம்துன் said...

முதல் கவிஞரை அழைக்கும் முதல் வரியிலேயே குசும்பா?

நாற்பது கவிதை எழுதிவிட்டால் நரை வந்துவிடுமா என்ன?
(பொதுவில், கவிதை மண்டையைப் பிய்த்துக் கொள்ள வைக்குமே தவிர நரை விழச் செய்யாது என்கிறார் கவிமடத் தலைவர்)

இங்க பாருங்க

" உழவன் " " Uzhavan " said...

எல்லாமே அருமைங்க..

KVR said...

//எல்லாமே அருமைங்க..//

நன்றி உழவரே